திங்கள், 3 நவம்பர், 2014

நாயி வாயிச்சீல









தெரட்டி முடிஞ்சதும் பொறப்படலாமுன்னா எங்க முடியிது? சொணையான இன்னுமே வரிக்கல, மணி பதனொன்னாவுதோ’ பன்னண்டாவுதா’ தெரில. ஆட்டத்துக்கும் போயிகிட்டு அலங்காரத்துக்கும் போறதுன்னா சாமானியமா?கயிட்டத்தப் பாத்தா காச கண்லக் காங்கறதெப்பிடி? நாமக் கைதொட்ட காரியமாவறதெப்பிடி?


எரநூறு வருதோ- முன்னூறு வருதோ  நாயனக்காரன இருந்து வாங்கியாடான்னு நாம்ப நம்ப தொந்தரவுக்குப் போயிரலாந்தான். ஆனா இண்டம் புடிச்சவன் அதக்கொண்டி எங்கியாச்சும் கூத கீதப்போட்டுக்கிட்டு வந்துட்டான்னா ஒரே ஒத்தப்பைசாவ திலுப்பி வாங்க முடியாது.


பொட்டைங்கன்னு அவனுக்கு மட்டுமில்ல, இந்த வையகத்துச்சனம் முச்சூட்டுக்குமே எளக்காரந்தான். பெறத்தியார ஏஞ்சொல்லணும்? பெத்தவளே நம்ப தலமேல கொலாய வெச்சி தேக்கிறா, அபிராமிப்பிள்ள இருந்தவரிக்கும் ஓரேடத்துக்குப் போவ வர பேசப் புடிக்க பக்கத்தொணையாயிருந்தா, அவளத்தா அனாமுத்தா மண்ணுக்கு வாரிக்குடுத்துட்டமே.


பொம்பளயாப் பொறக்க வேண்டியவ, ஆம்பளயாப் பெறந்து அவ அடஞ்ச சிறும கொஞ்சமா? நஞ்சமா? பொன்ன உருக்கி பூமியில வாத்தாப்பிடி’ தங்கத்த உருக்கி தரையில வாத்தாப்பிடி’ தகதகன்னு ஆளும் அவ அழவும் பிள்ளய கண்ல பாத்தாப் பசியாறும். பாதியில போறதுக்குத்தாம் பாவிமுண்ட அப்பிடியிருந்தாளோ என்னம்மோ’

சாவற வயசா சண்டாளிக்கி?

ஆடிக்காத்துல பூளப்பூவு பறக்குமே அப்பிடி ஓடி ஓடிச் சம்பாரிச்ச சொத்தும் அவளக் காப்பாத்தல, பிருசனே இவந்தான்னு நம்பி பூசப்போட்டுக் கும்புட்டுக்கிட்டிருந்தாளே தேவூரு கவுண்டம் மவன் அவனும் அவளக் காப்பாத்தல.


ஒக்கிலிப்பட்டி சாமியாருக்கிட்டதான் நானும் அவளுங் கூத்துப் படிச்சம். கூத்துப்படிச்சமில்ல அதுக்கும் மிந்தியே அபிராமி தாயம்மாளிண்ட கைபோட்டு பச்சச்சீலக்கட்டி போத்திராசி மாதாளுக்குப் பாலுக்கொடம் எடுத்துப்புட்டு வந்துட்டா.

பாலுக்கொடம் எடுத்தாளில்ல, அந்தவொரு மண்டலம் நாப்பத்தியெட்டு நாளும் அவப்பட்ட வாதயச் சொன்னா கல்லுங்கரையும், மண்ணும் உருகும்.


அப்பன், ஆயா, பெத்து, பொறப்பு அத்தனப் பேத்துக்கும் விரோதமாகி, அடிப்பட்டு, துணிப்பொறுக்கி, அனாதியாட்டம் ஊட்டவுட்டு பம்பாயிக்கி ஓடிபூக்கார ஆயா சமாத்துல சேந்து, பைட்டேண்டுக்கு வைட்டேண்டு, வீதிக்கி வீதி, சந்துக்கு சந்து, அல்லெடுத்து அங்கயிருக்கற பொட்டைங்களுக்கு எல்லாம் ஒரு வருசம், ஆறு மாசம் ராத்திரிப் பகலா ஊழியஞ் செஞ்சா.


ஊழியஞ்செஞ்சவளுக்கு கைபோட்டுத் துப்புரவு பண்டறமின்னுச் சொன்னவிங்க, பேச்சி சுத்தமா இருக்கணுமா வேண்டாமா?

இன்னைக்கி, நாளைக்கின்னு சாக்குப் போக்குச் சொல்றாங்களே தவர ஒரேவொரு தாயம்மாக்கூட இவளுக்கு கைபோடற மாதரயில்ல. வாக்கியங்கெட்ட கழுதைங்களப் போக்குல வுட்டுப் புடிக்கலாமின்னு இவளிருக்க, மறுபடியுமொரு மூணுமாசம் இழுக்கடிச்சி, அதும் பொறவு வடக்க வேண்டாந் தெக்க போலாமின்னு நம்ப உளுந்தூருப்பேட்டைக்கிக் கூட்டிக்கிட்டு வந்தாங்க. கூட்டிக்கிட்டு வந்தவிங்க அங்கியும் ஒரு மாசஞ் சும்மாவே குந்தவெச்சிருந்தாங்க.


குந்தவெச்சிருக்கும்பிடி இவ பொறுக்க மாண்டாம,

“கோத்தியாவே” திரிய இன்னும்மேயெனக்கு விதியா? முடியுமின்னா முடியுமின்னுச் சொல்லுங்க. இல்ல முடியலியா, பம்பாயிக்கி தாட்டிவுடுங்க வழுது சமாத்த அண்டி எனக்கானத நானேப் பாத்துக்கறேன்”னு கேக்க, கேட்டவளுக்கு “ஊக்கியிலக் குத்தி இடுக்கியில முள்ளு எடுக்கற சங்கிதியா இது? கைபோட்டு பொம்பளை யாவறதுன்னா உனக்கு அவ்ள ரேசா? அதுக்கெல்லாஞ் செட்யானப்படிக்கி தெகிரியம் வேணும் நீ செத்த பொறுமையா இருடி தாயி”ன்னு தேறுதலச் சொல்லி ஆத்தூருக்குக் கூட்டிப்போயி அங்கியுமொரு அஞ்சாறு நாளாட்டம் வெச்சிருந்தாங்க.


ஆறாந் நாளு நெறஞ்ச வெள்ளிக்கெழம’ அன்னைக்கி அந்தியோட ஆயாமாருங்க “எல்லாரும் சேலாமாருங்க” எல்லாரும் ஒண்ணாச்சேந்து ஒரேத்துருவா கடவீதிக்கிப் போனாங்க.

போனவிங்க இன்னதுதானில்ல இஷ்டப்பட்ட திம்பண்டத்த நீயி திங்கறமுட்டும் தின்னுடின்னு அபிராமிக்கி வாங்கிக் குடுத்துத் திங்கடிச்சாங்க.

திங்கடிச்சிப்புட்டு அன்னராவு மொதாட்டஞ் சினிமாவுக்குங் கூட்டிப் போனாங்க. போயிட்டு வந்து, கண்ணாறத் தூங்கு மவளே’ இன்னைக்கி விடியறதுக்குள்ள உனுக்கு உறுதியா கைபோடறம்மின்னுச் சொன்னாங்க. சொன்னவிங்கச் சொன்ன மாதர ரெண்டுமணி சுமாருக்கு இவளையெழுப்பி சுத்தம் பத்தம் பண்டி, சுனிக்கி சரட்லச் சுருக்கு வெச்சி, சுத்தியும் வெள்ளத் துணி சுத்திவுட்டாங்க. சுத்திவுட்டவங்க அதும்பொற வொரே அரச்சணங்கூட தூங்கவேப்படாதுன்னு இவுளுக்குக் காவலிருந்தாங்க.


விடிகாலம் நாலுமணிக்கெல்லாம் பாத்துக்க’ ச்சும்மா தடபுடலா மாதாளுக்கு முப்பூசயாவுது. பூச ஆவக்குள்ளயே சாமிக்கி மின்ன நெறம்மணம்மா இவள நிக்க வெச்சாங்க.

நிக்க வெச்சதும் அந்தல்லயிந்தல்ல திமறுதுக்கில்லாம கையரெண்டயும் பிந்தாயம்மா இறுக்கிப் புடிச்சிக்கிட்டா. அவ இறுக்கிப் புடிச்சதும் தலமசுத்த சுருட்டி வாயில துருத்தி, மனசார மாதாவ வருந்தடியம்மான்னுப் புட்டு, ‘மாதா... மாதா...’ன்னு இவ வருந்த, வருந்த கண்ணமூடி முழிக்கறதுக்குள்ள மானியப்புடிச்சி பறக்குனு அறுத்துப்புட்டா இன்னொரு தாயம்மா. அப்பிடி அறுத்ததும் அடேயெங் கொண்டாலா’ காலடியில உதரம் போவுது தானா காவேரி ஆறாட்டம்.


செவுத்தச் சாத்தி ஒக்காரவெச்சி உதரத்த வழிச்சி, வழிச்சி, இவ உச்சந்தல மொதக்கொண்டு உள்ளங்காலு ஒருக்கோடியா சொதம்பப் பூசிவுட்டா தாயம்மா.

தாயம்மா பூசப்பூச தம்பட ரத்தத்த தானே காங்கும்பிடி, அபிராமி அடி அம்மான்னு மயக்கம் போட்டுட்டா. அம்மான்னு சொல்லாதடி மாதான்னுச் சொல்லுடின்னா, அவ எருப்பு தாழமாண்டாம எரியிதே’ எரியிதேன்னு தன்னப்பால பெணாத்தறா, தன்னப்பால பெணாத்தும்படி அந்த தாயம்மா நல்லெண்ணய கொதிக்கக் கொதிக்கக் காயவச்சிக் கைபொறுக்க கொண்டாந்து அந்த பச்சப் புண்ணு வாப்பாட்டச் சுத்தியும் பலாசனா ஊத்தியுட்டா.

ஊத்த ஊத்த வாட்டமாக் காட்டிக்கிட்டிருந்தவ ஒருச்சித்தய கழிச்சி ச்சுறு ச்சுறுன்னு நோவு திலும்பும்பிடி அந்நேரம் அய்யய்யோ எங்கடவுளயே’ன்னு அந்தப் பிள்ள ஒரு கத்துதுதாங் கத்தனாப்பாரு’ கடகால் மட்டத்துலயிருந்து அந்தக் கட்டடமே கிடுகிடுன்னு நடுங்குது’



அருவாளோ, கொடுவாளோ தப்பத்தவற நம்ப மேலுலப்பட்டு அதால வொரு காயமாயிப் போச்சின்னா அதுக்கு எத்தன ஊசிப் போடறம்? எவ்ள மாத்தரத் திங்கறம்? கப்புப் போட்டு, சோக்கேத்தி, ஆத்துக்குப்போயி, தீர்த்தம் எடுத்தாந்து, ஆலாத்திச் சுத்தி, மாதா மொகம் பாத்த பிற்பாடும் ஆறாத ரணத்துக்கொரு மருந்துமில்ல, மாயமுமில்ல.

வலின்னு வாயத்தொறந்துப்புட்டா, மோரியிலக் குந்த வச்சி ஓலத் தண்ணிய மூட்டு மூட்டு காவு மேல அடிச்சி வுடறதோடச்சேரி’ அத மீறனா வெத்தலயில நல்லெண்ணயத் தடவிப் பத்து போடறதோடச் சேரி’

ஒடம்போக்காக் கூடப்போயி பக்கத்துலயிருந்து இந்த பாதரவு எல்லாத்தையும் பாத்துக்கிட்டுருந்த எனக்கு, கைபோட்டா தாயம்மா கிட்டதாங் கைபோட்டுக்கணு மின்னிருந்த வைராக்கியம் எங்கப் போச்சின்னே தெரில.

அத இன்னைக்கி நெனச்சாலும் கை காலு தொவண்டு, கிறுகிறுப்பு பதபதன்னு வந்துரும், காலோட தொறத் தொறன்னு மல்லும் முட்டிக்கும், அந்தப் பயத்திலியே நாங்கையும் போட்டுக்கல கிய்யும் போட்க்கல சொல்லாமப் புடிக்காம அபிராமிக்கி மின்ன திருட்டு வண்டியேறி ஊருக்கு வந்துட்டன்.



உதரக்கட்டு நிக்காம, காஞ்சப்புண்ணு பாதி, காயாத புண்ணுப் பாதின்னு அப்படியே கோமணத்துமேல கோமணங்கட்டி, கட கடயாப் பிச்சையெடுத்து, குருவுக்குப்பட்ட கடங்கட்டிப்புட்டு தாயிப்புள்ளயோட வந்து அவளும் எடஞ்சேந்தா. மரத்தவெட்டி ஆராச்சும் மாருமேல சாச்சிக்கிவாங்களா? எதுக்குயிந்த சித்ரவத? எதனாலயிந்த கந்தரக்கோலமின்னு கேக்கற சனத்துக்கு வதுலுஞ் சொல்ல முடியல? ஆதியில பகவாம் படச்சபண்டம்’ அப்பிடியே இருந்து தொலையட்டுமின்னு இருந்தாலும், மூக்கு மேல பீயப்பனாப்ல இந்த அருகருப்ப வெச்சிக்கிட்டுந் திரிய முடியல....

பவானி குட்டமுனியப்பங் கோலுதான் நாம் பொறந்த ஊரு. யெங்கப்பம் பழனிச்சக்கிலிக்கிம், ங்காயா பச்சாயா சக்கிலிக்கும் நாம் பொறந்தது ஒரேப்பையன். எனக்கொரு பொறந்தவ, அவபேரு அழிஞ்சிகண்ணி, பொறக்கும்போது உருப்படியாதாம் பொறந்தன். பத்து வயசாச்சோ இல்லியோ இந்தப் பித்து புடிச்சிட்டுது.

கண்ணுக்கு மையெழுதி, மண்டையில பூவசொருவி, கவுனுமாட்டி, கண்ணாடி மின்ன ஆட்டம் போட்டு, ஊட்ல பொம்பளச் சட்டியின்னுப் பேரெடுத்து ஊருலப் பேரெடுத்து, கூலிநாலிக்கிப் போற எடத்துலயும் பேரெடுத்து கரும்பு வெட்டப்போனத்தாவுல காட்டுக்காரன் கையக்கால கட்டிப்போட்டு, கடவாயிக்கி கல்லையும் நடுவாயிக்கி புழுலுயும் வெக்க, பத்துப்பேரு அதப்பாத்து சிரிச்சாங்களே அன்னிக்கி ங்கொக்கா பாவாடயோட ஓடி பூதப்பாடி கல்பனா ஆயா காலடியில வுழுந்தவதான், திலும்பி வூட்டுக்குப் போகவேயில்ல


. வவுத்துக்கு திங்கற சோத்துக்கும் இடுப்புக்கு கட்ற துணிக்கும் வஞ்சன வெக்காம வளத்தனா ங்காயா புண்ணியவதி’ மூக்கு குத்தியுட்டு ‘தொளசி’ன்னு அவதான் எனக்குப் பேரு வச்சா. தந்தாவும் வேண்டாண்டி’ ஒரு கிந்தாவும் வேண்டாண்டி’ அலேய் ஆதமுத்து முண்டைங்களா உருவா சம்பாரிக்கலாமின்னு பத்துப் பேரோடப் படுத்து நோவு கீவு வாங்கிக்கிட்டம்னா அந்த வெனய எங்கக் கொண்டுப்போயி தீக்கறது?



ஆடுமாடுங்களுக்கு கூட ஆசிப்பத்திரியிருக்குது’ நாயிம் தம்புண்ண தானே நக்கி ஆத்திக்கிது. அதோட கேவலண்டி நம்ப பொழப்பு. கண்ணக் கெடுத்தாலுங் கோல குடுத்தாங்ககறாப்பிடி மாதா நம்புளுக்கு ஒழச்சிப் பொழைக்க மாளாத தெம்பு குடுத்துக்கிறா. வாங்கடி கைய ஊனி கரணம் போடலாமின்னு அம்பரு, நூறு பொட்டைங்களை ஒண்ணாச்சேத்திக்கிட்டுப் போயி கலைக்கிட்ருக்கிட்ட,


“சாரு, சாரு இந்த மாதர, இந்த மாதர நாங்க சொந்தமா பாடுபட்டு தின்னுக்கறம், எங்களுக்கு எதனா ரோனு கீனு ஏப்பாடு பண்டி வுடுங்க”ன்னு பிட்டிசனு எழுதிக்குடுத்தா, அவிங்க என்னங்கறாங்க... வூடு வாச இருக்குதா? உங்க பேருலச் சொத்து பத்து இருக்குதா? சர்க்காரு வேங்குல ரொக்கம் ரோஜனம் கணக்கு வழக்கு இருக்குதாங்கறாங்க...

உங்க சோல இல்ல, ஒதுங்கவொரு வெவுலடி பாத்தியம் இல்ல, எங்ககிட்ட எதுவுமேயில்ல அத்தாந்தரமா நிக்கறம். எதோ நீங்க பாத்துவொரு ஒத்தாசப் பண்டுங்கன்னு கெஞ்சனா, அட்ரசீ இல்லாதவங்களுக்கு ரோனு குடுக்க சட்டத்துல எடமில்லங்கறானுங்கவொரு தலயெடுப்பா... போங்கடா எம்பட்டைங்களான்னு திலும்பி வந்துட்டம்.

ஆளாளுக்கு ஒரு தொழுவாடு கத்துக்கங்கடின்னு ஆயா சாமியாருகிட்ட கூத்துப்படிக்க கைகாட்டியுட்டா. சும்மா எப்பிடிச் சொல்றது? சாமியாரப்பன் வெட்டு வெடுக்குனு ஒரு வார்த்தப் பேசனதில்ல. பெத்த பிள்ளைங்களுக்கு மேல ஆச அம்பா வெச்சிருந்தாரு. அக்குசா தொழில கத்துக்குடுத்தாரு.

அபிராமி கண்ணாலந்தான் மொதல்ல படிச்சம். அப்பதான் இவளுக்கு அபிராமின்னு பேரு வௌங்கனது.


செரியான வுனுப்புக்காரி. எதச்சொன்னாலும் புடிச்சாலும் கப்பூரமாட்டம், ஆட்டம் அப்பிடித்தான், பாட்டும் அப்பிடித்தான். என்னாவெண்ணு சாரீரம் மட்லுங் கொஞ்ச கட்ட சாரீரம். நெட்டையோ, குட்டையோ சாமியாரு செட்டுக்கு, மொகாம, மெயினு வேசக்காரி இவதாங்ககிறாப்பிடி ஆயிட்டா.

சரிங் சரிங்கறாப்பல தொழிலுஞ் செஞ்சா. நாத்து வௌஞ்சி பயிராவறதுக்குள்ள மத்தளக்காரம் பூமுடியூர் ராசி அவள குத்தவதோட்டம் ஓட்டறதுக்கு ஆரம்பிச்சிக்கிட்டான். வூடு வாச அண்டாம, செலவுக்கு அஞ்சிப்பத்து வரும்பிடிய குடுக்காம ஒராம்பள கண்டயெடம் மேஞ்சிக்கிட்டிருந்தா பொட்டப்பொம்பள பிள்ளைங்க குட்டிங்கள வெச்சிக்கிட்டு என்னாப் பண்டுவா? ஒண்டி ஓரியா அவளால சம்சாரத்த சுதாரிக்க முடியுமா? செட்டாளுங்க ஆளாளுக்கு கூடி கூடி நாயம்பேசி, குசலஞ்சொல்லி அவளுக்கு உடுக்கயடிக்க,


“உன்னையொரு பெரிய மனுசன், வாத்தியாருன்னு நம்பி செட்டு மத்தாளத்துக்கு வுட்டா, எம்பிருசனுக்கும் அந்தப் பொட்டையனுக்கும் வௌக்கு புடிச்சி, என்ற வேரப்பறிச்சி வெந்தண்ணி வாக்கற, பரவால்லடா மாப்ள உன்ற பண்ணாட்டு”ன்னு ராசுப் பொண்டாட்டி வந்து பேயாடிப்புட்டு போனா.

“அல்லாருக்கும் எட்டெழுத்து, நம்புளுக்குப் பத்து எழுத்துலே அலே பறமுண்ட’ என்னா பாவம் பண்டனமோ, ஆணுக்காவமே, பொண்ணுக்கு ஆவாம, இந்த மானங்கெட்ட பொறப்பெடுத்து, போற வாரப்பக்கமெல்லாஞ் சின்னப்பட்டு சீரழியறம். ஒருக்குத்தமும் பண்டாத மின்னியே நம்பள தேவிடியாப்பட்டங்கட்டி பல்லுமேல நாக்க போட்டு மந்தைங்க பலவெதமாப் பேசுதுங்க. எச்செலைக்கி வீங்கறப்பொழப்ப இன்னையோட தல முழுவிடி ஆயான்னு உள்ள நாயத்த நானு எடுத்துச் சொல்ல வாத்தியாரும் ரெண்டு வார்த்த நல்ல பித்தி சென்னாரு.



சரீன்னு அபிராமியுங் கம்முன்னிருந்தா ராசு வழிக்கிப் போகாம. ஆடி நோம்பிக்கி கூத்தாட தேவுரு செட்டிப் பட்டிக்கிப் போனாம்பாரு அங்கவொரு எத்துக்காரவான் வந்துச் சேந்தான் அவுளுக்கு எமனா.

களரிக்கூட்டுமிந்தியே வந்தவம்பா’ விடியவிடிய சுத்தி விடிஞ்சும் அபிராமிய வுட்டுட்டு அந்தல்ல நவரல. இவ என்றான்னா அவஞ்சொல்ற பாட்ட பாடறா. அந்தப் பாட்டுக்கு பதனஞ்சி சீல மாத்தறா, ச்சும்மா பறந்து பறந்து ஆடறாப்பா. அந்த திருவாத்தான் ஆளுமேல ஆளவுட்டு இவளுக்கு நோட்டு நோட்டாப் பின்னுக் குத்தறாஞ் சலிக்காம. எப்பிடியும் அன்னைக்கி அனாமுத்தா சேந்தது உருவா ஏழ்நூத்தம்பதுக்கு மேலியே இருக்கும்.


அலங்காரம் முடிஞ்சதும் எங்கடா பிள்ளையின்னு தொழவுனா ரெண்டுபேரும் எவத்தயிருக்கறாங்கன்னு ஒண்ணுந்துப்பே இல்ல. அப்பறம் பாத்துக்க எந்த பிருசம் பொண்டாட்டி அந்த மாதர ஒத்துமையாயருப்பாங்க’ அவிங்க திங்கறதும் ஒரே வட்டலு படுக்கறதும் ஒரே கட்டலு. ஒண்ணும் மண்ணாப் பொழங்கிக்கிட்டிருந்தாங்க. நாளாவ ஆவ இந்த பிள்ளைக்கி சுத்தமா நெப்புக்கெட்டுக்கிச்சி. மாப்ள பெரும கண்ண மூடிக்கிம் பிடி அஞ்சாறு அலங்காரத்துக்கு ஆளு வரல


. கூத்து படு பாணி சாமியாரு கூப்புட்டு கண்டாற கழுத, ங்கோயா, ங்கொம்மான்னு ரவுசுப் பண்டும்பிடி மாப்ளக்காரனுக்கு ச்செட்யான ரோசம் வந்துட்டது.

அவனப்பத்தி அனாவசியம்’ அவனென்ன உன்ன அடிப்புடிங்கறது? நானாச்சி வா உனக்கு தனியா செட்டுக் கட்டித்தாரமின்னு ஒரே ரெண்டு நாளயில ஆளுங்களுக்கு மூவாயிரம், நாலாயிரம் மிம்பணங்குடுத்து சாமியாரு செட்டக்கலைச்சி அபிராமிக்கி தனிச்செட்டு கட்டிக்குடுத்துட்டான்.


இந்த ஆடுகாலிப் போனவ, குருவுக்கிட்டவொரு வார்த்தச் சொல்லிப்புட்டு நல்ல வாக்குசம் வாங்கிக் கிட்டுப் போவக்கூடாதா? போடா பிலக்காப் பையான்னு போவக்குள்ள சாமியாரு குடுத்து வெச்சிருந்த பொதுப்பணம் நாப்பதாயிரத்தையும் வாயிலப் போட்டுக்கிட்டுப் போயிட்டா. ஒரு கூத்தன்னைக்கி இந்த மனுசன் தண்ணிதாசனூர் அம்மங்கோயிலண்ட நின்னு,


 “அடியே குருத்துரோகி’ எண்ணி வொரேவொரு வருசத்துக்குள்ள என்ன கும்பி பத்தறாப்பல பத்தி யெரிஞ்சி போயிருவடி”ன்னு மண்ணவாரி வாரி தூத்த வாச்சொல்லுப் பலிச்சிட்டுது. அந்த ஆளிட்ட சாபனையோ’ அடிநாளு தீவெனையோ கவுண்டமவங்கூட சோடிப் போட்டுகிட்டு அங்கயிங்க சுத்தி ஆட்டம் போட்டது பத்தாதுன்னு இந்த கடகெட்ட மூளி அவனைக் கூட்டிக்கிட்டு வூட்டுக்கேப்போயி கும்மாளம் போடறதா?



அவிங்கம்மாக்காரி பாக்கறவரிக்கும் பாத்துட்டு, “எங்கித்தி பாமனையோ என்னு வவுத்துல வந்து பொறந்து இப்பிடி ஈனப்பானமில்லாம திரியற’ நீதாம் புளுத்துச் சாவற’ எங்கியாச்சும் கண்ணுக்கு மறப்பாப் போயி சாவு’ இங்கேண்டி வூட்ட கந்தறப் பண்டற? கூடப்பொறந்த பொறப்பு ஒரு வயசிப்பிள்ள இருக்கற வூட்ல இந்த மாதர அக்குறும்புல அழியறீங்களே நல்லாயிருப்பீங்களா? நாசமுத்து வேசமாரிப் போவிங்களா?”ன்னு ச்சும்மா வுட்டு வணக்கு வணக்குன்னு வணக்கி கடதாம்பு கட்டும்பிடி, கவுண்டம் மவன் போக்கு வரத்த அறுதியா நிறுத்திக்கிட்டான்.


 இவ மாப்ள வந்து பாக்கறதில்லையின்னு அலமோதி கெட்டலைஞ்சி சோறுதண்ணி கூட குடிக்காம கூத்துக்கு போறது, வந்து கூதப்போட்டுக்கிட்டுப் படுத்துக்கிறது. பங்கினி மாசம் ச்செட்யானப்படிக்கி சீசனு’ வருசக்கூத்தா வருது’ வர்ற கூத்த வாண்டாங்கலாமா? போற எடத்துலியே தங்குமடம். போட்டுக் கூத்தாடிக்கிட்டு தப்படியா வூட்டுக்கு வந்து போயிக்கிட்டிருந்தா.

அந்தப் பிரகாரம் பூலாம்பட்டி சித்தூருல நோம்பிக் கூத்து வொண்ணு தானாவதி மழைக்கி நிக்கிம்படி வூட்டுக்கு போவலாம்னு வந்தவ நட்ட நடு தாவாரத்திலேயே மாப்ளக்காரனும் அம்மாக்காரியுங் கொண்டி மாட்டிக்கிட்டு கெடக்கறதப் பாத்துருக்கறா.


அப்பிடியே அங்கம் பதற அடிவவுறுக்காந்த ச்சட்டங்குன்ன, ச்சரிகலம் நடுநடுங்க நின்னவ “அடியே உத்தமபத்தின எனக்கு பித்தி சொன்னியே இப்ப நீயேண்டி அவுசேரிப் போன”ன்னு ஒரோயொரு வார்த்தையின்னாலும் நாண்டுகிட்டுச் சாவும்பிடி கேட்டுப்புட்டு, கடகடன்னு கண்ணுத்தண்ணிய வுட்டுட்டு அந்தாண்ட வந்துட்டா.

அவ்வளதான் மக்யாவது வாரமெல்லாம், பன்னிக்கறியவறுத்து அதல பாசனத்த கலந்துக் குடுத்து அபிராமிய கொன்னுப்புட்டா அவிங்கம்மாக்காரி.


நெருப்பூரு நாவமரைக்கி சீருக்கு போயிட்டு தகோலு தெரிஞ்சி வரதுக்குள்ள எடுத்துக்கொண்டி எரிச்சுப்புட்டாங்க. எளம்பிள்ளி கூடுகாட்டுல. மவ மூஞ்சியப் பாக்கக்கூட ரொணமில்ல. ஆவுசந் தாங்காம குழிமேட்டுக்குப் போயி சாம்பல நவ்வாலு வாயி அள்ளித் தின்னுப்புட்டு வந்தம்.


நாங்க ஆருக்கு என்னா தீம்புச் செஞ்சம்?

தாயப் பழிச்சமா? தண்ணிய தடுத்தமா?

ஏழய அடிச்சமா?

 எளஞ்சாதம் உண்டமா?


 எனத்துக்கிந்த ஆண்டவனுக்கு எங்கமேல இத்தன கூரியம்?


கூனுக் குருடு, மொண்டி, மொடம் இப்பிடி ஒடம்புல வொரு ஒச்சமின்னாக்கூட மயிராச்சி, அதப்பத்தி காரியமில்ல. பாழாப்போன பொறப்புல கோளாறுபண்டி வேடிக்கப் பாக்குதேயந்த நொள்ளக்கண்ணுச் சாமி..



அபிராமிப்பிள்ளய நெனச்சிட்டம்னா அன்ன பொழுதுக்கும் அன்னந்தண்ணி ஆகாரம் எதுவுமே உள்ள எறங்காது. நாம்ப அழுதகண்ணுஞ் சிந்தன மூக்குமாயிருந்தா மாண்டவிங்க பொழைக்கப் போறாங்களா? மறிச்சி மண்ணவுட்டு மேல வரப்போறாங்களா? இல்ல அன்னைக்கியெழுதன எழுத்த பிரம்மன் அழிச்சி எழுதப்போறானா?


உச்சியத்தாண்டி ஒருமாறுப் பொழுதாச்சி சம்பளம் பிரிக்க, செங்கமா முனியப்பங் கோயில்ல எறங்கி பொடுபொடுன்னு வூட்டுக்குப் போயி, துணிமணிய அலசிப் போட்டுட்டு ஒருவாச் சோத்தக் குடிச்சதும் களப்பாயிருக்குதேன்னு செத்த படுத்தம்பாரு, எந்திரிக்கும்போது மணி ஏழு’

எஸ்.டூ.எ.பஸ்சு சங்கிரி வந்துட்டு திலும்பி பவனி போயிரிச்சி. அதும்பொறவு ஆதியா பாதியா கௌம்பி அம்மாபேட்ட வாரதுக்குள்ள மணி ஒம்பதர, அலங்கார கறவத்தானுங்க ஒருத்தங்கூட வூட்ல இல்ல, எட்டுமணி முட்டும் பாத்துட்டு மினிவண்டி பேசி எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்களாம். வூடு வூடா அவிங்களத் தொழாவிப்புட்டு வரதுக்குள்ள பத்துமணி கடைசி பஸ்சும் போயிட்டுது.



பக்கமாயிருந்தாலுந் தேவல. நாகனூரு வாத்தியாரூட்டு கூத்து. மெயினு ரோட்லயிருந்து பழையூரு, முழியனூரு மேல நடந்துப்போனா ஏழு மைலுக்கும் மேல சேரும். எந்நேரம் போறது? நேரங்காலமா வந்துருந்தா எதோவொரு வண்டி கிண்டி புடிச்சிப் போயிருக்கலாம் அத்துவானத்துல வந்து மாட்டிக்கிட்டமே என்னாப் பண்டறது?


செட்ல சாரி வேசமே இல்ல. அந்த சிறுத்த கண்ணஞ் சேவுருப் பையன் இப்பத்தான் புதுப்பழக்கம். சந்து அடைக்கத் தானாவும், பெருங்கொண்ட ஆக்கிட்டு கட்டிச் செலுத்த மாண்டான்.

மிந்தியாச்சும் சுப்ரமணி இருந்தாப்ல. பொண்ணு வேசத்துக்குப் பஞ்சமில்ல. போனப்பூட்லயே ஆளு அலங்காரத்துக்கு வரல. அவரெண்ணாப் பண்டுவாரு? பத்திருவது வருசமா செட்டுக்கு அவருப்பட்ட பாடு அந்தப்பஞ்சும் பட்டுருக்காது. அப்பிடி ஒழைச்ச ஒழப்புக்கு கைமேல கண்ட பலனா இன்னைக்கி ஒவித்தியப்பட்டுக்கிட்டு கெடக்கறாரு.


குஞ்சாண்டியூருக்கு அந்தாண்ட ஆண்டிக்கர காக்காயந்தெருவுக்கு ஒராட்டத்துக்குப் போயிருந்தம் மூணாம் வருசம் கூம்புக்கு கூத்துவுட்டவிங்க “வக்ரகேது பலி”தான் ஆடனுமின்னுப்புட்டாங்க. எந்த அலங்காரமா யிருந்தாலுஞ்சேரி சுப்ரமணி எத்து வரிசையாதான் தொழிலுப்பண்டுவாரு. அன்னைக்கிம் அவரு விலோச்சனா வேசம் போட்டுருந்தாரு.



அம்மாபேட்ட கணேசண்ணன் எரிகண்டங் கட்டியிருந்தாரு. வேகாத திரேகமும், போவாத உசுரும், நீங்காத சேம்பரமும் வேணுமின்னு வரம் வாங்க எரிகண்டன் வக்ரகேதுவ ரணகாளிக்கி பலி குடுக்க கூட்டிப்போறாள். மவன் உசுர மாய்யக்க வேண்டாமின்னு விலோச்சனா அழுது பொலம்பறா. மின்ன வச்ச கால பின்ன வெக்க மாண்டேன்னு சூரனொருபக்கம் இழுக்க, வுடமாண்டேன்னு பொண்டாட்டி குறுக்க வுழுந்து தடுக்க ஓரியாட்டத்துல சூர வேசக்காரன் அவள எட்டி ஒதச்சி தள்ளி, அந்தாண்ட தாட்டி போவானில்ல. அந்த கட்டத்துல, கணேசன் ஒதச்ச ஒதயிலே, ஏமாந்தாப்பிடி அழுதுக்கிட்டிருந்த சுப்ரமணி முதுவுல ஈடுதாங்கி போச்சி. சும்மா ரெண்டு நாளு மூச்சுத்தப்பு வுழுந்ததுதாங் காரணம். பொறவு மனுசன் வாயத்தொறந்து பாட முடியல. எங்கயெங்கியோப் போயி, அளவத்த பணம் செலவு பண்டியும் நோவு நல்லாவது. பொறுக்கித் திங்கற கோழிக்கி மூக்கத் தறிச்சாப்ல, நல்ல தொழிலாளிக்கி நேந்த கதியப் பாரு’ வவுத்துப்பாட்டுக்கு இப்ப ஊரு ஊரா ஈயம் பூசிக்கிட்டு திரியறாரு.



அவருமில்ல நானும் போவலைன்னா கனகராசி வாத்தியாரு கொஞ்சொத்தாப் பேசுவாரு. கெடயில காலு தங்காம அங்கயும் இங்கயும் ஏண்டா காலாந்திரியா திரியற? செட்டுக்கே வந்துர்றா’ ஆத்தர அவசரத்துக்கு வேணுமின்னா பணங்கினம் கூட வாங்கிக்கிவியாமின்னு அவருதாம் பொணையாயிருந்து ஆபரேசம் பண்ட செட்டு பணத்துலயிருந்து எட்டாயிரம் தாரமின்னு சொல்லி மிம்பணம் மூவாயிரத்த கையோட குடுத்தாரு.

ஆச்சி, ஆச்சி இந்த எட்டு பூர்த்தியா ஆடனா வேணுங்கற பணந்தெரண்டுக்கும், ராயவேலூருலியே டாக்கிட்ருமாருங்க கைபோடறாங்களாம். நோவு இல்லாம போயி செஞ்சிக்கிட்டு வந்துர்லாம் நிம்மிதியா’


கல்பனா ஆயா கூட முடிஞ்சத தாரமின்னிருக்குது. எப்பிடிப் பாத்தாலும் போவ வர மேஞ்செலவ ஆயாப் பாத்துக்குவா. ஆசுபத்திரி சமாச்சாரம் செலவு இவ்ளதான் ஆவுமின்னு ஆரு கண்டது? முன்ன பின்னகூட ஆவும். எதுக்கும் உண்டுன்னா காசிருந்தா ஒதாரணைக்கி ஆவுமின்னுதான் நானு கரவாட்டத்துக்கும், கூத்துக்குங் கைகுடுத்துட்டு இப்பிடி பட்டழியறன்.

கனகராசிச் சமாவையுஞ் சும்மாச் சொல்லக்கூடாது, மனசார காங்காம ஏவிடியம் பேசுவாங்களோ என்னமோ தெரியாது. கண்டுவொரு நாளும் எச்சி எடுப்பு பேசனதில்ல. நாலுபேத்து தொழிலு நம்பளப் பத்தி வாதிக்கக்கூடாது. ரோட்டுக்கால்ல நின்னு பாலமாதர பொந்தியப் போட்டு ஒழம்பிக்கிட்டு போறவர ஒண்ணுரெண்டு வண்டிங்கள நாங்குறுக்காட்ட ஒருத்தங்கூட நிக்கல.

நேரம் எந்நேரமோ அம்மாபேட்ட ஊரே அடங்கிப்போச்சி, வவுநேரங்கழிச்சி, தொலையா ஆரோவொரு ஆளு வாட்டசாட்டமா நடமாடற மாதர தெம்பட்டது. ஆராயிருந்தா நமக்கென்ன? கூத்துக்குப் போவ முடியாத வெசனத்துல எம்பாட்ல நானிருக்க, கிட்ட வரச்சொல்லி அவங் கைசாடப் பண்றானே’ இதென்றா தும்பமின்னு பக்கம் போயிப்பாத்தா அவனெங்கியோ வொரு போலிசு ஏட்டு.

சிப்பமோ சீமச்சரக்கோ என்னான்னுந் தெரில. ஆளுக்குப் பதமான போத. சீப்பு வண்டிமேல அட்னகாலுப் போட்டு படுத்துகிட்டிருந்தாஞ் சிவரெட்டுப் பத்தவெச்சிக்கிட்டு.

“என்னாங்க கூப்ட்டது”ன்னு நாங்கேக்க எடுத்த எடுப்பில


“வர்றியா”ங்கறானே ஒரு துடியா.


தடி எடுக்கறப்பவே அடி எங்க வுழுவுமின்னு எனக்கா தெரியாது. இருந்தாலும் இவன் நம்மள வெச்சி தெரிஞ்சி கூப்டறானா? தெரியாம கூட்றானான்னு அறிகொழப்பம்’ எப்பிடியோ இருந்து சாட்டாவுது. இதுக்கு மேல்பட்டு நாங்கூத்துக்கு போறது நெசமில்ல. வளச்சிக்கிட்டு வூட்டுக்குட்ப போவலாமின்னாலும் பவானி வரிக்கும் காரு இருக்கும். அந்தாண்ட வண்டியுமில்ல, பைபாஸ்ல போயி பொழுது விடியந்தின்னியும் குந்தியிருக்கணும்.

அவுத்தப்போயி ஏப்பா அவுதிப்பட்டுக்கிட்டு கெடக்கணும்? இப்பிடிப்போயி சித்தங்கூறியும் இவங்கிட்ட தடுமாறிப்புட்டு வந்தா என்னாக் கெட்டுப்போச்சி? இருந்தாப்பிடியிருந்து எனக்கு தெங்கற நெனப்பெடுத்துக்கிச்சி.


ஆம்பள தெரண்டு ஆளானா ஒடனே கண்ணாலங் கார்த்தி. அவனுக்குண்டான குடும்பங்குட்டி உற்பந்தி ஆவுது. அப்பிடியதுக்கு வசிதிப் பத்தலைன்னா அததுக்கு பொண்டுங்க இருக்கறாங்க அங்கபோயி அம்பதுன்னும் நூறுன்னுங் கடஞ்சொல்லிக்கூட அறுப்பத் தீத்துக்கறாங்க. பொம்பள சமைஞ்சா பெத்தவிங்க கபம்பட்டு, ஒடம்பட்டு ஒருத்தங் கையில புடிச்சிக் குடுக்கறாங்க. அதுச் சுத்தப்படலியா, அவப்பாத்து துணிஞ்சா, அவ பொச்சி பொறன ஆணாகப்பட்ட அத்த சீவனுங்களுக்கும் காரோடத்து நாயி மாதர காசுங்கையுமா சுத்தறாங்க.


இந்த நிக்கற ஆத்துமாவுக்கு ஊத்த ஒடம்புல பிப்பு எடுத்தா அதக்கண்டு ஆத்த மருந்துண்டா? நம்பள அரிசின்னு அள்ளிப் பாப்பாருமில்ல, உமின்னு ஊதிப் பாப்பாருமில்ல. பிரியப்பட்டு வலியினா வர்றங்கறவன ஏம்பா வாண்டான்னுச் சொல்லனுமின்னு நானு அவன அப்பிடிவுட்டுட்டு, இப்பிடி இநதாண்ட வந்து ரோசனப் பண்டிக்கிட்டிருக்கவே அவஞ்சீப்பு வண்டி ஆள ஓரங்கட்டி நிக்குது. வந்து ஏறுன்னு அவஞ்சொல்லுமிந்தி நானு மின்னித்தி சீட்டேறி குந்திக்கிட்டன்.

ஒரே அழுத்துல வண்டி எட்டிப் புடிச்சாப்ல கொடம்பையூரு கரட்டுக்கு வந்துட்டது. அடிக்கரட்ல வட்டப் பாறையும் பாழியும் இருக்கும்பாரு’ அவுத்த வண்டிய நிப்பாட்னான். பாறமேல மழக்காயித்த விரிச்சுட்டுட்டு வண்டியிலந்து நாலஞ்சி பொட்ணத்த எடுத்துப் பிரிச்சி வெச்சாம்பாரு’ எந்த சோத்துக்கடையிலே வாங்கனதோ’ கறிசோத்துப் பொட்ணமாட்டயிருக்குது வட்ட வாகறயே நெய்யி மணக்குது.



மூக்குல பருக்க வர தின்னுப்புட்டு எந்திரிச்சன். அன்னந்தினியும் வாயே பேசாமாயிருந்தவன், “சரக்கு சாப்டுறியா”ன்னு ரெண்டு வெராந்தி பாட்லயும் எடுத்து மின்ன வெச்சான் ஏட்டு.

அதயுஞ் சைசா மண்டயத்திருவி வாயில ஊத்திக்கிட்டன். வீதக்கட்ட வவுறு தூக்கங்கேட்டுது. அதோட அளவான போத, ஆடியாடி அலண்ட ஒடம்புக்கு தோதா யிருந்தது. குளுங்காத்துச் சிலுச்சிலுங்க, மேலுப் பசபசங்க எனக்கு ஏனா தெப்ளச்சுத்தி புரு புருங்குதே’ அப்பிடியே கட்டய கீழசாச்சி கண்ண மூடனம்பாரு. ஏட்டும் எம்மேல சாஞ்சான்.


சாவலு நல்ல பெருஞ்சாதி சாவலு. அணைய அணைய ஒணக்கையா இருந்திச்சி. இப்பிடியே கதய ஒப்பேத்தி, ஓட்டி, கூத்த கொண்டயத்துக்கு கொண்டு போயி, மங்களம் பாடிப்புடலாமுன்னு நாங்கெனாக் கண்ட மாயத்துல, மின்னாம மொழங்காம எண்ணத்துல இடி எறங்குதே’

ஏப்பா உரியேறன சாத்ரீகப் பூன தயிரிருக்க சட்டிய எத்தன நேரம் நக்கும்? வெறியெடுத்து ஆவு ஆவுன்னு என்ற அடிமடிய தொழவனவனுக்கு ஆட்டு ஒதப்பை யாட்டம் எம் புடுக்குச் சிக்கும்பிடி அவம் மொவற நறவல்ல கையுட்டாப்ல சுண்டிப்போச்சி. “த்தூ”ன்னு காறித் துப்புனவங் காது, காதா அப்பறாஞ் சடையாம.

ஓரடியா? ரெண்டடியா? “அய்யோ சாமி நானு அறியாத பித்தியிலே தெரியாம தப்புப் பண்டிப்புட்டன். வுட்டுறு சாமி நானு ஓடிப் பொழச்சிக்கிறன்”னு அழுது பரிதவிக்கிறன் அவங்காலப் புடிச்சிக் கெஞ்சறன் அவங்காயா காதறந்தப் புண்டமேல ஓக்க’ அதயெதயுங் காதுலப் போட்டுக்கவேயில்ல. “மி யெம்மா பூக்குல தெங்கோ’ ஓரி நிக்கற நீ பணியின காமிச்சேவு”ன்னு மயித்த வளச்சிப்போட்டு ச்சும்மா குப்பு குப்புனு குப்பி, என்னய மிங்கட்டு பிங்கட்டு கட்டி சீப்பு வண்டியில தூக்கிப்போட்டு, கண்ணாடியச் சாத்தி, கதவுச்சந்துல எங்காலு ரெண்டையும் வெளியே இழுத்து, ஒரட்டாங்கையிலப் புடிச்சிக்கிட்டான்.


சோத்தாங்கையில அடிப்போன பூணோட அத்தச்சோட்டு குண்டாந்தடியப் புடிச்சி, எல்லப்பன்னியக் குத்தறாப்ல என்ற உசுரு நெலயில ஒரேக்குத்து’ ஆண்டவங் குடுத்த அந்த ஆதாரப்பொருளு கொழண்டு கலங்கிப் போச்சி. இன்னும் நாலீடுப்போட்டு அப்பையே அடிச்சிக் கொன்னிருந்தா ஆயிருக்கும் வதவதயான வதப்பண்டி, வாய்க்கா கரையில வாரிச் சூறையிட்டுப்புட்டுப் போயிட்டான்,

ராவெல்லாம் எங்க கெடந்தன்? எப்பிடி பூதப்பாடி வந்தன்? ஆருக்கொண்டாந்து ஆயாவூட்ல போட்டது. ஒரு பிருவுந் தெரில. நாம் பொழச்சது மாதா புண்ணியம்’ மறுசென்மம்

. “பொறப்படு ஆயா வேலூருக்கு, போயி டாக்டரிண்ட கைபோட்டுக்கிட்டு வந்தரலா”மின்னு கண்ணு முழிச்சதும் மொதக்காரியமா ஆயாள ஆயாள கூப்புட்டுச் சொன்னன்.



கருத்துகள் இல்லை: